Thursday, October 11, 2007

"நிர்வாணம்" என்பது எப்போதுமே ஆபாசமா..??!

ஆபாசம் என்றால் என்ன..??!

நிர்வாணம் என்றால் என்ன..??!

ஆபாசம் என்பது மனிதனில் கீழ்த்தரப் பாலுணர்வை தூண்டுதல் என்பதற்குள் மட்டும் அடங்கி நிற்கிறதா.. அல்லது மனித சிந்தனையில் மனிதனுக்கு உபயோகமற்ற சிந்தனைத் தூண்டலை ஆபாசம் என்பதுவா சரியானது..??!

ஆபாசம் என்பதன்.. கருதுநிலை சூழ்நிலைக்கு, சமூகங்களுக்கு, கலாசார மட்டங்களுக்கு மற்றும் நாகரிகப் பண்புகளுக்கு ஏற்ப மனிதனால் வரையறுத்துக் காட்டப்பட்ட அளவுகளில் மாறுபடுகின்றது என்பதை உணர்கிறோமா..??!

ஆபாசம் என்று வருகின்ற போது நிர்வாணம் என்பதும் ஓடி வந்துவிடுகிறது. நிர்வாணம் என்றால் என்ன.??! அது எப்படி எப்போ ஆபாசம் என்றாகிறது..??!

நிர்வாணம் என்ற பதம் உடலை மையப்படுத்தி அதிகம் பாவிக்கப்படினும் ஆபாசம் என்று வருகின்ற போது உடல் சார்ந்த நிர்வாணமே கருத்தில் அதிகம் கொள்ளப்படுகிறது.

ஆனால் நிர்வாணம் என்ற சொல்லுருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கருத்தாழம் சரி வர நோக்கப்படுகிறதா..??!

உடலை மூடி வைத்துவிட்டு திறந்து விடுதல் ஒரு வகை நிர்வாணமாகக் காட்டப்படுகிறது. சில ஞானிகளோ அறிவை சூழ்ந்துள்ள அறியாமையை நீக்குதல் நிர்வாணம் எங்கின்றனர். இன்னும் சிலரோ.. துறவின் எல்லை அல்லது தியானத்தின் எல்லை அல்லது உச்ச ஞானத்தின் நிலையடைதல் என்பதை நிர்வாணம் என்பதாகப் பொருள் கொள்கின்றனர். உதாரணம் "புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்" இதில் புத்தன் ஆடை களைந்தான் என்பது அர்த்தமா அல்லது அவன் அறியாமை களைந்து வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்து மெஞ்ஞான அறிவின் உச்சத்தை அடைந்தான் என்பதா சரியானது..??!

ஆபாசம்.. என்று வருகின்ற போது கூட ஆடைகளற்ற உடல் ஆபாசம் என்பது எப்போதும் சரியானதா..???!

உடலை ஆடைகளால் மூடுவதும் மனிதன்.. திறப்பதும் மனிதன்.. அப்படி இருக்க இந்த ஆபாசம்.. நிர்வாணம் என்பவை எப்படி உடல் சார்ந்த சிந்தனைகளாக எழுகின்றன..??! எழுந்தன...??!

ஆபாசம் என்பதும் நிர்வாணம் என்பதும் சிந்தனை சார்ந்து உள்ள ஒன்றாகவே நான் கருதுகின்றேன். எமது சிந்தனையின் தன்மை போக்கு தேவை என்பன தான் ஆபாசம் என்பதையும் நிர்வாணம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

ஒரு பெண் அரைகுறையாக ஆடை அணிகிறாள் என்பதில் ஆபாசத்தை வரையறுப்பது மனிதனின் சிந்தனையே அன்றி அவளது ஆடைகள் அல்ல. அந்த அரைகுறை என்பதை விலக்கிவிட்டு உடல் என்ற ஒன்று சார்ந்து எமது சிந்தனை சர்வ சாதாரணமாக எழும் எனின் அதில் ஆபாசம் புலப்படாது. எந்த மனிதனுக்காவது தனது உடலைத் தான் பார்க்கும் போது ஆபாசம் தெரிகிறதா..??! அதேன் பிறர் உடலை பார்க்கும் போது அல்லது பிறர் தன்னுடலை பார்க்கின்றனர் எனும் போது மட்டும் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன.

ஆபாசம் என்ற இந்த சொல்லாடலும் அதன் பின்னால் உருவாகும் கருத்துருவாக்கமும்.. மனிதனின் சிந்தனை செயல் என்பனவற்றின் போக்கை தீர்மானிப்பதால் இதை நான் ஒரு பேசும் பொருளாக்கி இங்கு தருகின்றேன்.

இன்னொன்று ஆபாசம் என்பது மனிதனின் அந்தரங்க உறுப்புகள் சார்ந்து எழுவது.

பாலுணர்வு என்பது பிரதானமாக மூன்று வகையில் தூண்டப்படும். ஒன்று பார்வை மூலம். இரண்டு தொடுகை மூலம். மூன்று உடல் இரசாயனம் மூலம்.

பாலுணர்வுத் தூண்டல் என்பதின் பின்னணியில் தான் ஆபாசம் வரையறுக்கப்படுகிறதா..??! நிர்வாணம் என்பது வரையறுக்கப்படுகிறதா..??! அப்படி என்றால் பாலுணர்வுத் தூண்டலுக்கு ஆளாகாத நிர்வாணம் என்பது ஆபாசம் இல்லை என்றல்லவா வர வேண்டும்.. அப்படித்தானே நோக்க வேண்டும்.

பாலுணர்வுத் தூண்டல் ஆபாசம் நிர்வாணம் அரை நிர்வாணம் என்பதெல்லாம் ஏன் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை சார்ந்து இக்கருத்துருவாக்கங்கள் எழுகின்றன..??! பெண்ணை ஒரு மனிதன் என்று நிர்வாண நிலையில் வைத்து நோக்கும் போது எப்போதும் ஆபாசம் தோன்றுமா..???! பாலுணர்வு தூண்டல் மட்டும் தான் தோன்றுமா..??! அப்படிப் பாலுணர்வு தோன்றுதல் கூட ஆபாசம் என்றாகுமா..??! பாலுணர்வுத் தூண்டல் அடுத்தவரை பாதிக்காதவரை.. அது எப்படி ஆபத்தானது என்றாகும்..??!

ஆபாசம் என்பது பெண்களுக்குள் மட்டும் தானா நிலைத்திருக்கிறது.. பெண்ணின் துணைப்பால் உறுப்புகள் தானா ஆபாசமானவை..??!

உயிரியலின் படி துணைப்பால் உறுப்புகள் உணர்ச்சித் தூண்டல் உள்ளவை என்பதை ஏற்றுக் கொள்கிறேம். ஆனால் ஆபாசம்.. நிர்வாணம் என்பது அவற்றுள் அடக்கப்படவில்லை.

ஆபாசம் நிர்வாணம் என்பதெல்லாம் எமக்கு காட்டப்படும் வடிவத்தில் தான் பாலுணர்வை தூண்ட செய்யப்படுகின்றதே தவிர.. நிர்வாணம் ஆபாசம் என்பவை இயல்பான வெளிப்பாட்டின் மாறுபட்ட மனிதக் கருத்துருவாக்கத்தின் தாக்கம் என்றே நான் கருதுகின்றேன். மனிதன் வரையறுத்துக் கொண்டவற்றால் தான் உடல் ஆபாசமானதே தவிர உடல் ஆபசத்தோடு தோன்றவில்லை. இயற்கை ஆபசத்தோடு தோன்றவில்லை. நிர்வாணம் என்பது மனித கருத்துருவாக்கம் என்பதுதான் யதார்த்தம். அதை சமூகத்தில் பல்வேறு வரைவிலக்கணங்களோடு பல் வேறு சூழலுக்கும் ஏற்ப பாவிக்கின்றனர். அதுவே மனித சிந்தனைக்கு தகுதியிடலையும் செய்யப் பாவிக்கப்படுகிறது.

ஆக ஆபாசம் என்பது நிர்வாணம் என்பது.. எப்போ குறை.. குற்றமாகிறது.. ஒரு மனிதனின் சிந்தனைக்கு அது காட்டப்பட்ட பரிமானத்தில் தான். ஒவ்வொருவருக்குள்ளும் ஆபாசம் என்ற கருத்துருவாக்கத்தின் பரிமானம் மாறுபட இது வாய்ப்பளிக்கிறதல்லவா. அப்படி இருக்கும் நிலையில் எது குற்றமற்ற நிர்வாணம் எது குற்றமற்ற ஆபாசம்.. எது குற்றமான ஆபாசம்.. குற்றமற்ற நிர்வாணம் என்று காட்டுதலுக்கும் தேவை உண்டல்லவா..??!

அண்மையில் ஒரு பிரதான தமிழ் இணையத்தளம் ஒன்றில் "புதுமைப் பெண்" என்ற தலைப்பின் கீழ் இந்தப் படம் இணைக்கப்பட்டிருந்தது.



ஆதாரம்: இங்கு அழுத்தி பிரதான இணைப்பைப் பார்க்கவும்.

இதைப் பார்த்த எனது நண்பன் சொன்னான் இதென்ன ஆபாசமா இருக்குது. இப்படி இருக்கிறதா புதுமைத்தனம். இதில் என்ன புதுமைத்தனம் என்று..??! ஆபாசமாகத் தோன்றல் புதுமைத்தனமா..??! என்று பதிலுக்கு வினவினான்.

எனக்கும் அது நியாயமான கேள்வியாகத்தான் தோன்றியது. ஆடைகளற்ற நிலை என்பது புதுமையல்ல. காரணம் ஆதி மனிதனும் ஆடைகளின்றியே இருந்தான். ஆடைகளால் உடலை மூடுதல் என்ற நிலை தோன்றிய பின்னர் அல்லது அப்படி ஒரு சிந்தனை உருவாக்கத்தை மனிதன் உயர்ந்தது என்று வரையறுத்துக் கொண்டதன் பின்னர் ஆடைகளைக் களைந்து உடலை இயற்கைத்தனமாகக் காட்டல் என்பது புதுமை என்று எண்ணுகின்றனரோ.. அங்கும் மனிதன், தான் பழைய நிலைக்கு மீளுதலை புதிய சிந்தனையாகக் காட்டுறான் அல்லது காட்ட முயல்கின்றான். இயற்கை காட்டவில்லை. அது குறுகிய காலத்தில் பெரிய மாற்றத்தைக் காட்டவில்லை..! என்று விளக்கமளித்தேன்.

அதன் போது எழுந்த எனது இந்த சந்தேகம் இன்னும் இருக்கவே செய்கிறது. அவனில் இப்படத்தை பார்த்ததும் தோன்றியுள்ள கருத்துருவாக்கம் என்னில் இல்லை. நான் இதை ஆபாசமாக நோக்கவில்லை. ஆபாசம் என்று சொல்வதிலும் நிர்வாணம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்தில் அது உள்ளதை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். அவன் இல்லை அப்படி இருக்காது நீ உண்மையை சொல்ல மறுக்கிறாய் எங்கிறான். இங்குதான் தோன்றியது இந்த சொல்லாடல்களுக்குள் பொதிந்திருக்கும் மனித இயற்றுகைகளின் செல்வாக்கும் மனித சிந்தனையை அவை செய்யும் ஆதிக்கமும் என்பதாகக் கருதி உங்கள் முன் இவ்விடயத்தைக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் பெண்கள் சார்ந்துதான் ஆபாசம் நிர்வாணம் என்ற சிந்தனையோட்டம் இருக்கிறது என்ற நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் காட்டுவதில் புதுமைத்தனமும் இல்லை.

இவ்வோவியம் தொடர்பில் உள்ள விமர்சனங்களையும் சேர்த்து உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்.

இவை தொடர்பில் உங்கள் பார்வைகள் என்ன.. சிந்தனையோட்டங்கள் என்ன..??!

குறிப்பு: 1. தயவுசெய்து குறித்த படத்தை கீழ்த்தரமான பாலியல் கண்ணோடு நோக்காதீர்கள். அது ஒரு ஓவியம். ஓவியனின் சிந்தனைக்கு உருக்கொடுத்த நிகழ்வு. மதிப்பளியுங்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.

2. உங்கள் சிந்தனையில் எழும் வளமான கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். நாகரிகமற்ற சொல்லாடல்களைத் தவிருங்கள்.

Tuesday, October 09, 2007

பெரியார் ஒரு தமிழின விரோதி - ஆதாரங்களுக்கு ஆதாரம்

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் - தமிழ் வெறுப்பு

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

பெரியார் "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.
-----------------

பெண் விடுதலை - திருமணத்தை அடியொற்றி வந்த பெண் விடுதலை

...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.

தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை.

"குடியரசு' (12.8.28)
-----------

வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ? - அறிவியலையும் ஆங்கிலத்தையும் கலந்தடித்து ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தல்

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு தமிழர் முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,
இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?
----------

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ? - தமிழ் மொழி கலைச் சொற்களை கண்டறியத் தூண்டாது ஆங்கிலச் சொற் பாவனையை தமிழில் திணித்தல்.

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.
------------

தொல்காப்பியன் மாபெரும் துரோகி தமிழ் இலக்கண கர்த்தாக்களில் ஒருவரான தொல்காப்பியர் மீதான தமிழ் இலக்கண வரம்புக்கு அவசியமில்லாத வசைபாடல்.

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
-------------

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? - பிறமொழித் திணிப்பு.

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்
கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.
-------------

தமிழ் காட்டுமிராண்டி பாஷை - மொழியின் தொன்மையை வைத்தே அதைப் பழித்தல். அப்ப உலகில் உள்ள பழைய மொழிகள் எல்லாம்.. மனிதர்களின் பகுத்தறிவின் விளைவில்லையா..??! வெறும் காட்டுக் கூச்சலா..??!

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 - 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
------------

ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது - ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை எதிர்த்து ஆணும் பெண்ணும் விலங்குகள் போல கலவி செய்து சமூகம் உறவுகள் என்ற நிலையறுந்து வாழும் நிலையைத் தூண்டல்.

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.

...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
-----------

எல்லாமே தமிழ்தான் ! - தமிழின் தனித்துவத்தை பிறமொழிகளோடு தமிழை கலப்படைய செய்து அழிக்கும் கருத்து. பிறமொழிக்காரர்களை தமிழுக்கு எதிராக தூண்டி விடுதல்.

தமிழன், தெலுங்கன், கன்னடியன், மலையாளி இவர்கள் பேசுவதெல்லாம் தமிழ்தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழியென்று கூறுபவன் தமிழ் மகனல்லன்; தமிழை அறியாதவன்; ஆரியத்திற்குச் சோரம் போனவன். நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய ஆதிக்கத்திற்கு ஆக்கந்தேட முயற்சிப்பவன்.

- "மொழியாராச்சி' நூலிலிருந்து
------------

திருக்குறளைக் கண்டிக்கிறேன் ! - உலகப் பொதுமறையே தமிழில் இருந்ததற்காக குற்றமாக்கப்படுகிறது. அதன் உட்பொருள் அறியாத முட்டாளா ஈ வெ ராமசாமி.

...குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் "குறளை' எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது.

- பெரியார் பேட்டியிலிருந்து
------------

தேர்தலுக்காக ! - திராவிட நாட்டை வலியுறுத்தும் வகையில் பேசல்.மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாட்டை வேண்டினர். அண்ணாவும் அக்கருத்துக்களை அப்போது ஏற்றுக்கொண்டவர். அவர் ஈ வெ ராமசாமியில் திராவிடக் கொள்கையின் பாதிப்பால் தான் திராவிட நாடாக்கிக் கேட்டாரா அல்லது பிறமொழி மக்களை கொண்டிருக்கும் தமிழக நிலப்பரப்பை தமிழகத்தோடே தக்க வைக்கக் கேட்டாரா என்பது முக்கியம். ஆனால் ஈ வெ ராமசாமிக்கு தனித் தமிழ்நாடு என்று பேசிய மா பொ சி போன்றவர்கள் கடும் எதிரிகளாகத் தெரிந்தனர். அவர்களை ராமசாமி திட்டித் திரிந்தார்.

காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது' என்று விதி செய்து கொண்டவுடன், தி.மு.க. "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை விட்டு விட்டோம்' என்று சொல்லி, தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சனையாக ஆகி விட்டதால், அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சு கூட விடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால், அவர்களுக்கு பயந்து கொண்டு அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல் "நாங்கள் திராவிட நாடு பிரச்சனையை கைவிட்டு விட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்' என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள்.

- "விடுதலை' (30.3.67)
---------------

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது: - தமிழரசு, தமிழாட்சி தமிழ்மாகாணம் என்ற எதனையும் தமிழர்களுக்கு அங்கீகரிக்காத நிலை. ஆனால் திராவிட நாட்டில் தமிழர்கள் திராவிடராக வாழ வேண்டும் இந்திய தேசியத்தோடு இணையந்திருக்கக் கூடாது என்ற ஈ வெ ராவின் முரண்பாடான நிலைப்பாடு. தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளத்தோடு மிளிரக் கூடாது. ஆனால் திராவிட அடையாளத்தோடு கன்னட சகோதர்களை அண்டி வாழலாம் என்ற திராவிட ஆதிக்கத்தை தமிழர்கள் மீது திணித்தல்.

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
-------------

அண்ணாதுரை பற்றி பெரியார் ! - அண்ணா பற்றி.

அண்ணாதுரை ஏன் போனார்? திராவிடர் கழகத்தில் இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது; பெரிய நிலைக்கு வர முடியாது என்று கருதினார். வெளியேறினார். சௌக்கியமாக பணம் சம்பாதித்துக் கொண்டு வாழ்கிறார். அதைப் பார்த்து ஆத்திரப்பட்டுத்தானே, நாமும் பணம் சம்பாதிக்க வேண்டும்; எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது என்று கருதித்தானே, இன்றைய துரோகிகளும் வெளியேறுகின்றார்கள்?
---------------

கன்னடக்காரன் ! - தன்னைக் கன்னடன் என்று பறைசாற்றல். தமிழர்கள் மத்தியில் தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் குறை சொன்னபடி.. தன்னை கன்னடன் என்று இனங்காட்டி மொழிதல்

ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்.
---------------
ஹிந்தி இருக்கட்டும் - ஹிந்தியின் இருப்பைக் காத்தல்.

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை; அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்... சில காரியத்திற்காக இந்தியை கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள்; ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

- "விடுதலை' (7.10.48)
--------------

முட்டாள்தனம் ! - தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக தாய் மொழி.. தாய் நிலம் என்பதை முட்டாள் என்பது.

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

"விடுதலை' (14.11.1972)
--------------

தொடரும்.......

Monday, October 08, 2007

பெரியார் ஒரு தமிழ் இன விரோதி - ஆதாரங்கள் 10

1. தமிழைக் காட்டு மிராண்டி மொழி என்றவர் ஈ வெ ராமசாமி என்ற கன்னட தேசத்தைச் சேர்ந்த பெரியார். தமிழ் மொழியைத் திட்டியதைத் தவிர அதன் வளர்ச்சிக்கு அவசியமான எந்தச் சீர்திருத்தங்களையும் முன்மொழியாமை மற்றும் அதற்காக பாடுபட முன் வராமை. (தனது பத்திரிகை விளம்பரத்துக்காக தமிழன்பர்கள் கூடி எடுத்த தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் என்பதை மொழி வளர்ச்சி என்ற நோக்கற்று தனது பத்திரிகை வளர்ச்சிக்காக பயன்படுத்தியதோடு மட்டும் தூங்கிவிட்டமை இதற்கு நல்ல உதாரணம்.)

2. தமிழர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்று உலகில் எல்லா மனிதருக்கும் உள்ள பகுத்தறிவைக் கூட பெரியார் தமிழர்களுக்கு வழங்க மறுத்தமை.

(இக்கூற்றிக்களின் மூலம் தமிழ் மொழியின் தமிழர்களின் தொன்மையை அழித்து ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி ஆதிக்கங்களினை அனுமதித்து தமிழர்களின் மொழி அடையாளத்தை சிதைக்க முனைந்தவர்.தமிழகத்தில் தமிழ் வழக்கொழிதலைத் தூண்டியவர்.)

3. தமிழ் இனத்தின் தமிழ் தேசிய இருப்பை தமிழர்களின் தனித்துவத்தை திராவிடப் போர்வை கொண்டு அழிக்க முனைந்தமை.

4. தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்காத தன்மை, அவர் இந்திய உபகண்டத்தில் தமிழ்களுக்கு என்ற ஒரு நில இருப்பை அங்கீகரிக்கவில்லை என்பதைக் காட்டி நிற்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய நில இருப்பை அவர்களின் சிந்தனையில் இருந்தே அழிப்பதற்கு சமனானது.

5. தன் கூட்டத்தில் இருந்து கொள்கை முரண்பட்டு விலகிய அண்ணாவை பண ஆசை பிடித்த ஒருவன் என்று விமர்சித்தமை. அரசியல் ரீதியாகக் கூட தமிழர்கள் திராவிடத்துக்குள் பதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அண்ணா தமிழர்களுக்கு என்று தனிநாடு கேட்பதைக் கூட எதிர்த்து நின்றவர். தமிழகத்தில் தமிழ் மொழியின் முதன்மைத் தன்மையை சிதைக்க முனைந்த ஹிந்தி திணிப்பை எதிர்க்க மறுத்தமை.

6. பெண்களின் கர்ப்பம் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையென்று கூறி.. பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கூறி தமிழர்களின் இன விருத்திக்கு சாவு மணி அடிக்க முனைந்தமை.

7. தமிழ் மக்களின் உயர்ந்த கலாசார பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் வகையில் ஒருவனுக்கு - ஒருத்தி என்ற எண்ணக் கோட்பாட்டை சிதைக்கவல்ல கருத்துக்களை "பெண் விடுதலை" என்று காட்டியபடி தமிழர்கள் மத்தியில் சமூக விரோத, மனித இன விரோத கருத்துக்களை விதைத்து.. விலங்குத்தனமான, எழுந்தமானமான ஆண் - பெண் பாலியல் புணர்வை வழியுறுத்தி.. தமிழ் சமூகத்தின் இருப்பையே கொடிய பால்வினை நோய்களைப் பரப்பி.. அழிக்க முயன்றமை.

8. தமிழ் மொழியின் தொன்மை.. இலக்கணக் கட்டமைப்பை சீரழிக்கும் வகையில் இலக்கியங்கள் மீதும்.. தமிழ் இலக்கண, இலக்கிய கர்த்தாக்கள் மீதும் பார்பர்ன.. இந்துத்துவ.. சாதிய சாயங்களைப் பூசியமை.

9. பிராமணர்கள் மீது எதிர்ப்பென்று தமிழர்களிடையே பிராமண வர்க்க இருப்பையும்.. ஏனையவர்களை அவர்களுக்கு எதிராகவும் தூண்டி சமூக வன்முறைத்தனமான நிலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டமை. அதன் தொடர்ச்சியாக மறைமுகமாக சாதிய இருப்பை தமிழகத்தில் தக்க வைத்தமை. அதைக் கொண்டு தமிழகத்தில் சமூகப் பிரிவினையைத் தூண்டி தமிழர்களைப் பிரித்தாண்டு.. சாதிய அரசியலுக்கு வித்திட்டமை. தமிழர்களிடையே தமிழின ஒற்றுமையை இல்லாமல் செய்தமை.

10. தனது திராவிடக் கொள்கையின் கீழ் தமிழகத்தின் தோற்றம்.. இருப்பு என்பதை.. இல்லாமல் செய்து தமிழர்களை திராவிடர்களாக்கி.. அவர்களின் தமிழ் தேசிய அடையாளங்களை திராவிட அடையாளங்களாகக் காட்டி.. தமிழினத்தினதும் அதன் தேசியத்தினதும் இருப்பை.. அழிக்கும் வகையில் சமூகத்தில் மேற்குலக சமூக விரோத சிந்தனைகளை பகுத்தறிவு என்ற பெயரில்..கட்டவிழ்த்து விட்டமை.

உண்மையாக தமிழர்களுக்கும்.. ஒட்டுமொத்த மனித இனத்துக்குக்கும் அவசியமான அறிவியலை தமிழகத்தில் வளர்க்கவோ இனங்காட்டவோ முனையாமை.

இந்துக் கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில் ஏனைய மத ஆதிக்கங்களினால் சிதைந்து கொண்டிருந்த தமிழழிவை ஊக்குவித்து.. சைவத்தால் வளர்ந்து கொண்டிருந்த தமிழ் மொழியின் வளர்ச்சியை இல்லாமல் செய்ய முற்பட்டமை.


"தமிழ் தேசிய விரோதி ஈ வெ ராவை இனங்காண்போம்" என்ற விழிப்புணர்வை முன்வைத்து.. சர்வதேச தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக இப்பதிவு இடப்படுகிறது

தோப்பிருந்து ஒரு காவியம்



குருவி ஒன்று தான் வாழ
தேடியது ஒரு தோப்பு
வந்தது மாந்தோப்பு
வரவினில் கண்டது
ஓர் மலர்
மலரிடை மலர்ந்தது
வாழ்வெனும் வசந்தம்
மலரதும் குருவியதும்
படைக்குது ஒரு காவியம்
அது...
மாநிலத்தில் மானிடர் தாம்
கண்டிடாத புனித காவியம்.

தோப்பருகே ஒரு குடிசை
அங்கும் வாழுது
ஒரு கூட்டம்..!
வஞ்சகமும் பொறாமையும்
அவர்தம் மனங்களில்
கறுவும் மனதை அடக்க முடியா
கலங்கி நிற்குது அவர் சித்தம்..!
கற்பனையில் கூட
அடுத்தவன் வீழ்ச்சியில்
அகம் மகிழவே துடிக்குது..!
பாவம் அவர்
அறிவிருந்தும்
அறியாமையில்...!

தோப்பிருந்த குருவியது
மனமிரங்கி
மலருடனிணைந்து
பாவப்பட்டவர் மீது
ரட்சிக்கிறது
மானிடா....
மனமதில் அமைதி கொள்
வாழ்வதில் சிறப்பாய்
மாற்றானை உன்னில் தரிசி
உன்னை மாற்றான் மதிப்பான்..!
அன்றி...
வாழ்வில் நீயே
உன்னை மிதிப்பாய்
உன் நினைவுகள்
ஓர் நாள்
உன் நிஜம் அழிக்கும்...!


மீள்பதிப்பு தமிழமுதத்தில். இங்கு அழுத்திப் பார்க்கவும்.

சொன்னாலும் சொல்லாட்டிலும் இது தாண்டா இப்ப "காதல்"



நியூயோர்க் ஜம்பரில் (NYjumper)
லண்டன் ஸ்ரைலில் (style)
அரைப் பென்ரர் (pender) தெரிய
டெலிம் (denim) போட்டு..
பி.எஸ் 3 (ps3) வாங்க
பிளாசா (plaza) போனேன்..!

அங்கே..
பிற்சா கட் (pizza hut)
பிற்சாவோடு (pizza)
ஸ்ரைலா நிற்கையில்
லப் ரொப் (laptop) அடக்கமாய்
நீ இருந்தாய்.

திறி டி விசனில் (3D vision)
உன்னைக் காண
ஐ.ஆர் (IR) கொண்டு
ஸ்கான் (scan) செய்தேன்
எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல
திறில்லாய் (thrill) இருந்தாய்..!

உடனே..
புளூருத் (bluetooth) சிக்னலாய்
என்னைத் தந்தேன்
பதிலுக்கு..
மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera)
நீ என்னைப் பார்த்தாய்.

அதுதான் சாட்டென்று..
ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே
அருகில் வந்தேன்
எம்பி 4 (MB4)இல் இசை தேட
எம்பி 3 (MB3)போல இசைந்தாய் என்னோடு.

ஜி பி எஸ் நவிகேற்றராய் (GPS navigator)
நீ வந்ததால்
காதல் கை வேயில் (highway)
ரவுண்டெபவுட் (roundabout) தேடி
அலையும் நிலை களைந்தேன்.

டிஜிற்றல் (digital) கமராவாய்..
நீ அருகில்
காணும் காட்சிகளோ
பல மெகா பிக்சல் (Megapixel)அளவுகளில்...!

என்ன மாயமோ
நானறியேன்
திடீரென..
பென்ரியம் 4 (pentium 4)
காட்டிஸ்க் (hard disc) போல
ஸ்ரக்கானாய் (stuck)...
டீபக் (debug) செய்து
சீர் செய்ய
ஸ்ரெயிட்னர் (straightener) போல
சூடானாய்.

கூலா..(cool)
மக்கில் (mcdonalds)
கோலா (cola) ஒன்று வாங்கி
ஸ்ரோவால் (straw) தந்தேன்
லிப்ஸ்டிக் (lipstick) கரையும் என்றே.!

சடார் என்று
கன்னத்தில் ஒரு கிஸ் (kiss) தந்தாய்...
யூரோ ஸ்ரார் (euro star) வேகத்தில்
காட் (heart) அடிக்க..
வின்ரர் ஜக்கட் (winter jacket) போல
இறுக்கி
இதமாய் ஒட்டிக் கொண்டாய்.

அப்படியே..
சென்றல் (central) லண்டன் வரை
கக் (hug) செய்து கொண்டே
வார்கிங் (walking) போய்..
கை பார்க் கோர்னரில் (highpark corner)
பெஞ்சில் (bench) இருக்க
ஈசி ஜெட் (easyJet) போகும்
சத்தத்தில்
மெய்மறந்து கேட்டாய்..
நியுசிலண்ட் (New zealand) ரூர் (tour) போவமா என்று.

சுப்பர் கொம்பியூட்டர் (super computer)
புறசெசர் (Processor) வேகத்தில்
கணக்குப் போட்டே
கிரடிட் ஸ்கோர் (credit-card score)
சரி பார்த்தே..
கூகிளில் (google) தேடி
வேர்ஜினில் (virgin) ரிக்கற் (ticket) பதிவு செய்தேன்.

கில்ரன் கொட்டலில் (Hilton hotel)
லக்சறி றூமும் (luxury room)
ஒன்லைனில் புக் (online book)செய்தேன்.

இடையில்..
எஸ் எம் எஸ் (SMS)
எம் எஸ் என் (MSN)..
சற்றிங் (chatting) மூலம்
நாளும் சொல்லி
மேர்சிட்ஸ் பென்சில் (Mercedes benz) எயார்போட் (airport) போனோம்.

பட்....
ஜெள்ளுடன் (gel) ஒருத்தன்
சிமாட்டா (smart) வர
கொலிபூட் ஸ்ரார் (hollywood star) என்று
செல்போன் (cellphone) போலச்
சிரித்தவளாய்
பிளையிங் கிஸ் (flying kiss) அடித்தபடி
கேம்போயாய் (gameboy) அடைக்கலமானாய்
அவன் கையில்..!

என் மனசோ...
கடைசி கேமில் (game) கோட்டை விடும்...
இந்தியன்
கிரிக்கெட் ரீம் (team) போல
அப்செட் (upset) ஆக..
பக்கத்தி பாரில் (bar)
ஜக்டானியல் (jackdaniel) ஒரு பெக் (bec) தள்ளிட்டு
ஜோன் பிளேயர (John Player)
ஊதியபடி..
பென்ஸை (benz) முறுக்கியவன்
டெல்ரா ரொக்கட் (delta rocket) வேகத்தில்
லக்சறி பிளட்டில் (luxury flat)
என் றூமில் (room)
சோபாவை (sofa)
கட்டியணைத்தபடி
பி.எஸ் 3 யோடு
ஐக்கியமானேன்...

அடுத்ததிற்கு..
தூண்டில் போட
லப் டொப்பில்..
பேஸ் புக்கையும் (facebook)..
திறந்தபடி..!

Thursday, October 04, 2007

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது



காலைச் சூரியனை
கையெடுத்துக் கும்பிட்டு..
மாலைச் சந்திரனை
வீழ்ந்து வணங்கி..
சுழன்றடிக்கும் சூறாவளிக்கு
பயந்து நடுங்கி...
மின்னலும் இடியும்
மரணத்தின் தூதென்று
ஓடி ஒளித்து..
தீயதும் சுடுவது
முன்வினைப் பயனென்றும்
பூமியது அதிர்ந்து பிளப்பது
பாவிகள் அழிவென்றும்
இயற்கைக்குள்
உள்ளதை விளங்காமல்
உளறிய கணங்களில்..
எதிர்வினை சொல்லி
பகுத்தறிவென்று
வாய் வீரம் பேசி
வீண் பொழுது கழித்திடாமல்
ஆயிரம் கதை கட்டி
அலைந்து கொண்டிராமல்..
மூளையைக் கசக்கி
விண்கலம் கட்டி
விண்ணுக்கு அனுப்பி
வீர சாதனை படைத்த
திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி
ரஷ்சிய மண்ணிருந்து
விண்ணேகி
அரை நூற்றாண்டும்
கடந்தாயிற்று.
மனித வரலாற்றின்
புது யுகம் இது..
புறப்படுங்கள்..
சுன்னாகம் சந்தியில்
இருந்து...
செவ்வாய் நோக்கி
செவ்வாய் தோசத்தை
சிதைத்து விட்டு வருவோம்.


சுடச் சுடச் சுட்டது யாழ் இணையத்தில் இருந்து.