Wednesday, November 21, 2007

வீர தீபம் கார்த்திகை 27



தீவினில் ஒரு தீபம்
அது வீர தீபம்
உடல்தனை உருக்கி
உயிரினை அளித்து
மூட்டிய தீபம்

கார்த்திகை மாதம்
மலர்ந்திடும் மலரும்
காட்டினில் சிறுத்தையும்
வளவினில் செம்பகமும்
வீதியில் வாகையும்
வணங்கிடும் தீபம்
அது வீர தீபம்

மக்களின் மனங்களில்
மலர்ந்திடும் நினைவுகள்
சொரிந்திடும் விழினீரில்
உருகியே தாழ்ந்திடும் தீபம்
அது வீர தீபம்

விடியலின் ஒளிதேட
இருளோடு கலந்திட்ட
தமிழீழ மைந்தரவர்
ஏற்றிய தீபம்
அது வீர தீபம்

காற்றோடு சாயினும்
மழையோடு மாழினும்
தமிழீழ மண்ணிலது
அணையாத தீபம்
அது வீர தீபம்

வேங்கைகள் உயிரது
வேள்வியில் கலந்திட்ட
வேளையில் பிறந்திட்ட
மாவீர தீபம்
அது வீர தீபம்

அழியாத நினைவோடு
நெஞ்சினில் வாழ்ந்திடும்
வீரர்கள் உருவினில்
ஏற்றிடும் தீபம்
அது வீர தீபம்

வையகம் உள்ளவரை
ஒளிர்ந்திடும் தீபம்
கார்த்திகை மாசத்து
மாவீரர் தீபம்
அது எங்கள் வீரர் தீபம்.

கரங்கள் கூப்பியே
நினைவுகள் ஒருக்கியே
காற்றும் மெளனிக்க
காவியம் படைந்த
நாயகர் நினைவோடு
விழி சொரியும் பூ வைத்து
ஏற்றுவோம்
காத்திகை தீபம்
அது வீர தீபம்

விடியலில் என்றும்
ஒளிரட்டும்
விடி வெள்ளியாய்
கார்த்திகை 27 இல்
கடமை மறவாது
ஏற்றும் தீபம்
அது வீர தீபம்.


No comments: